Search This Blog

Wednesday, November 1, 2023

Fame and money would vanish in a trice !! - சொப்பன வாழ்வில் மகிழ்ந்து

Decades ago, in 1960 Supreme Court of India – decided on a case titled – ‘Commissioner Of Excess Profits ... vs N.M. Rayaloo Iyer & Sons’ – which was an appeal    filed with certificate of fitness granted by the High Court of Judicature at Madras.  It read :   M/s. N. M. Rayaloo Iyer & Sons - hereinafter referred to as the assessees - are a firm carrying on business principally in dyes and chemicals. They are the chief representatives in "South India" of the products of the Imperial Chemical Industries Company (India) Ltd. - hereinafter referred to as the "I. C. I." The business in dyes and chemicals was in the years material to these appeals, conducted in the name and style of "Colours Trading Company", with its head officer at Madura and in thirteen branch officer in different towns in "South India."   

‘தீன கருணாகரனே நடராஜா’ -  என்ற பாடலை கேட்டு ரசித்து இருப்பீர்கள்.  !! 

தீன கருணாகரனே நடராஜா  நீலகண்டனே

நின்னருள் புகழ்ந்து பணியும்

என்னையும் இறங்கி அருளும்

மௌன குருவே கரனே

எனையாண்ட நீலகண்டனே ||


 

மீனலோசனி மணாளா

தாண்டவமாடும் சபாபதே

ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே

மௌன குருவே கரனே

எனையாண்ட நீலகண்டனே ||

 

சிவபெருமான் நடராஜனாக  களிநடனம் புரியும், தில்லைப்பதியிலே குயவர் குடியிலே - பிறந்தவர்  திருநீலகண்டர். பொன்னம்பலத்து அம்பலக் கூத்தரின் திருவடிகளிலே மிகுந்த பக்தி கொண்டு, சிவபெருமானை,  திருநீலகண்டம் என்று எந்நேரமும் இடையறாது நெஞ்சம் உருகப் போற்றி வந்த காரணத்தால்   திருநீலகண்டர் என்ற காரணப் பெயர் பெற்றார் இந்த நாயனார். . 



எம். கே. தியாகராஜ பாகவதர் - மாயவரம் கிருஷ்ணசாமி தியாகராஜ பாகவதர் [சுருக்கமாக எம். கே. டி]  தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திர கதாநாயகனும் மிகச் சிறந்த கர்நாடக சங்கீத தமிழ் பாடகர்.  

திருச்சியில் 1910 மார்ச் 1 -  கிருஷ்ணமூர்த்தி/ மாணிக்கத்தம்மாள் தம்பதியருக்கு பிறந்து,  பாலக்கரை பகுதியில் வளர்ந்தார்.  வரகனேரியில் உள்ள குழுமியானந்த சுவாமிகள் சமாதிக்குப்போய் மனமுருகிப் பாடுவது தியாகராஜனின் வழக்கம்.  பிடில் வித்வான் சின்னையாபிள்ளை  பாகவதரின் முதல் குரு. பஜனைப் பாடல்கள்தான் அந்தக்கால சேர்ந்திசை. தியாகராஜன் 'பித்தா பிறைசூடி' தேவாரப்பாடலை பஜனையில் பாடி  கவர்ந்தாராம்.  திருச்சியில் உள்ள ஆர்.ஆர்.சபா  தோற்றுவித்தவர் F.G.நடேச ஐயர்.  நடேசய்யர்தான் தியாகராஜனின் உடல் அழகாலும் குரல் வனப்பாலும் கவரப்பட்டு ஹரிசந்திரா நாடகத்தில் லோகிதாசனாக நடிக்கவைத்தார்.  நவீன சாரங்கதாரா'  என்ற படம் பாடலுக்காகவே ஓடியது. 40 பாடல்கள். சுத்த ராகங்களால் அமைந்த பாடல்கள். மக்கள் மனங்களை பாகவதர் கொள்ளைகொண்டார்.    

1934 ஆம் ஆண்டு பவளக்கொடி என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். 15 தமிழ்த் திரைப்படங்களில் நடித்தார். அதில் 6 படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாகும். 1944 இல் வெளியிடப்பட்ட இவரின் சாதனைப் படமான ஹரிதாஸ் 3 ஆண்டுகள் ஒரே திரையரங்கில் (சென்னை பிராட்வே திரையரங்கு) ஒடி 3 தீபாவளிகளைக் கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை அன்றையக் காலகட்டத்தில் பெற்றது.   வெற்றிகரமான முதல் வாரத்துக்கு போஸ்டர் வெளிவந்த நாட்களும் உண்டு.  அந்நாளில் பாகவதரின் படங்கள் சிறப்பு வெற்றிபெற்றன. இரண்டு வெற்றிப் படங்களாக சிந்தாமணியும் அம்பிகாபதியும் வந்தன. பாகவதரின் புகழ்பெற்ற “ராதே உனக்குக் கோபம் ஆகாதடி” சிந்தாமணியில் வந்த பாடல்தான். இப்படத்தில் மொத்தம் 25 பாடல்கள்.  அன்றைய கதாநாயகன் - தன அற்புத குரலால்  தமிழ்நாட்டை 30 ஆண்டுகட்கு மேல் கட்டிப்போட்டு மயக்கியஎம்.கே.தியாகராஜ பாகவதர்.  

திருநீலகண்டர் (Thiruneelakantar) 1939ம்  ஆண்டு வெளிவந்து சக்கைபோடு போட்ட தமிழ்த் திரைப்பம்.   பி. கே. ராஜா சாண்டோ இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், செருகளத்தூர் சாமா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.  பாகவதரின் பாடல்களுக்காகவும், என். எஸ். கிருஷ்ணன்-டி. ஏ. மதுரம் ஆகியோரின் நகைச்சுவைக்காகவும் இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது,  பிரபல நாதஸ்வர கலைஞர் டி. என். ராஜரத்தினம் பிள்ளை இத்திரைப்படத்தில் கௌரவ வேடத்தில் தோன்றினார்.  இப்படத்தில் மொத்தம் 21 பாடல்கள் -  பாபநாசம் சிவன் பாடல்களை இயற்றி, இசையமைத்திருந்தார். இவற்றில் தீன கருணாகரனே என்ற பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது.  இவ்வளவு பாடல்களா என எண்ண வேண்டாம் - அந்த களங்களில் பாட்டுக்கள் அதிகம்.  1934ல் வெளிவந்த - பவளக்கொடி  திரைப்படத்தில்  55 பாடல்கள் இடம்பெற்றிருந்தது. இத்திரைப்படம் 100 வாரங்கள் ஓடியது.  

30 வயதில் அவர் பிரச்னைகளுக்கு உள்ளானார்.  1940-களில் பரபரப்பாக பேசப்பட்டது லட்சுமி காந்தன் கொலை வழக்கு.  சி.என்.லட்சுமி காந்தன், 'சினிமா தூது' என்ற பத்திரிக்கையை  நடத்தி வந்தார். இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருந்ததால் காகித பற்றாக்குறை காரணமாக லைசன்ஸ் கிடைக்காத போதிலும்,   'சினிமா தூது'  வெளிவந்து, பத்திரிக்கையில் திரைத்துறையிலிருந்த முக்கிய நட்சத்திரங்களின் அந்தரங்க வாழ்க்கையை பற்றி கிசுகிசுக்களை விவரமாக எழுதியது.  இதனால், கோபமடைந்த திரைத்துறைச் சார்ந்த சிலர் அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கவனத்திற்கு எடுத்து சென்று பத்திரிகை உரிமையை முடக்கினர். தொடர்ந்து திரைத்துறையை சார்ந்தவர்களை தாக்கி 'இந்து நேசன்' பத்திரிக்கையில் எழுதி வந்த லட்சுமிகாந்தனுக்கு எதிரிகள் பெருகினர்.  08-11-1944 அன்று லட்சுமிகாந்தன்  புரசைவாக்கம் பகுதியில் ரிக்க்ஷாவில் சென்ற போது மர்மநபர்களால் கத்தியால் குத்தப்பட்டார்.   வழக்கு விசாரணையை தொடர்ந்த காவல்துறையினர், இந்த கொலை வழக்கில் நடிகர்கள் தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், தயாரிப்பாளர் ஸ்ரீராமுலு நாயுடு உள்ளிட்டோரை  கைது செய்து, கொலை மற்றும் கூட்டுச் சதி உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.  தியாகராஜ பாகவதர் உள்ளிட்ட 8 பேருக்காக அன்றைய பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்ட இந்தியாவிலிருந்த மிகப்பெரிய வழக்குரைஞர்கள் வாதிட்டனர். தியாகராஜ பாகவதரும் என்.எஸ்.கிருஷ்ணனும் 1946-ஆம் ஆண்டு தங்கள் வழக்கை லண்டனிலுள்ள 'ப்ரிவி கவுன்ஸிலுக்கு' எடுத்துச் சென்று நடத்தினர். 1947-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 'ப்ரிவி கவுன்ஸில்' வழக்கை மறு விசாரணை செய்ய வேண்டும் என மதராஸ் உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. 

 


 மதராஸ் உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கை மறுவிசாரணை செய்து இருவரும் குற்றமற்றவர்கள் என 1947-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விடுதலை செய்தாலும், தியாகராஜ பாகவதருக்கு அதன் பின் திரைத்துறையில் மிகப்பெரிய சறுக்கல் ஏற்பட்டது. மீண்டெழ முடியாமல் அவர் திரைத்துறையைவிட்டே விலகினார்.  

மதுரை நகரத்தில் சிந்தாமணி திரையரங்கம்   மாநகரத்தின் மையத்தில் கீழவெளி வீதியில் அமைந்து இருந்தது.  முதல் பாராவில் குறிப்பிட்ட நிறுவனத்தை நடத்திய - என். எம். ஆர். வெங்கடகிருஷ்ணய்யர், என். எம். ஆர். சுப்பராமன், என். எம். ஆர். சேசய்யர் மற்றும் என். எம். ஆர். கிருட்டிணமூர்த்தி ஆகிய நான்கு சகோதர்கள் சேர்ந்து கட்டி முடித்து, 13 மே 1939 அன்று திறக்கப்பட்டது. இச்சகோதர்கள் இராயல் டாக்கீஸ் (Royal Talkies)  திரைப்பட நிறுவனத்தை நிறுவி, திரைப்பட தயாரிப்புப் பணிகள் மற்றும் திரைப்பட வினியோகப் பணிகள் செய்து வந்ததுடன், சென்னை மாகாணம் முழுவதும் சாயப்பவுடர் விற்கும் தொழிலும் செய்து வந்தனர்.  இராயல் டாக்கீஸ் நிறுவனத்தினர் 1937-இல் தயாரித்து, மதுரை சிட்டி சினிமா திரையரங்கில் வெளியிட்ட சிந்தாமணி திரைப்படம் தொடர்ந்து 3 ஆண்டுகள் காட்சிப்படுத்தியதின் மூலம் ஈட்டிய இலாபத்தைக் கொண்டே சிந்தாமணி திரையரங்கம் கட்டப்பட்டது. இலண்டன் நகரத்தின் ஓடியன் திரையரங்கத்தின் கட்டிட வடிவத்தில் இத்திரைப்படம் கட்டப்பட்டது. மேலும் இத்திரையரங்கில் எம். கே. தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ் திரைப்படம் 3 தீபாவளிகளைக் கடந்து 770 நாட்கள் ஓடியது.   

 இத்திரையரங்கம் காலப்போக்கில், 2005-ம் ஆண்டிற்குப் பிறகு தொடர்ந்து நட்டம் ஈட்டியதால், 2008-ம் ஆண்டில் சிந்தாமணி திரையரங்கத்தை மதுரை ராஜ்மகால் துணிக்கடை நிறுவனத்திற்கு விற்றபின் -  6 மாடி  துணிக்கடை   இவ்விடத்தில் இயங்கி வருகிறதாம். 

சொப்பன வாழ்வில் மகிழ்ந்து – சுப்ரமண்ய ஸ்வாமி உனை மறந்தார் - அந்தோ

அற்பப் பணப் பேய் பிடித்தே – அறிவிழந்து அற்பர்களைப் புகழ்வார்  .. .. ..

 

அந்தோ விந்தையிதே – அறிந்தறிந்து ஆழ்நரகில் உழல்வாரே - மாந்தர்

அந்தோ விந்தையிதே – அறிந்தறிந்து ஆழ்நரகில் உழல்வாரே - இவர்

சிந்தை திருந்தி உய்ய - குகனே உன்தன் திருவருள் புரியாயோ  ..   

கர்நாடக சங்கீத ராகங்களைப் பிரபலப்படுத்தியவர், ஆயிரக்கணக்கான இசை ரசிகர்களை தன குரலால் கட்டிப்போட்டவர் (ஒரு சமயம் அவர் சென்ற ரயில் நிறுத்தப்பட்டு அவர் பாட்டை மக்கள் கூட்டம் கேட்டனாராம்);  1940 களில்  'அம்பிகாபதி' படத்தில் 11,000 ரூபாய் சம்பாத்தியம், தங்க தட்டில் சாப்பிட்டவர், அந்த காலத்தில் - மோட்டார் பைக், கார், வெள்ளைக்குதிரை என சவாரி வந்தவர் !! - சிறை சென்று புகழையும் செல்வத்தையும் இழந்து 1.11.1959 அன்று மறைந்தார்.   

வாழ்க்கை எவ்வளவு நிலையற்றது ! - புகழும் பணமும் ஈட்டுவது எவ்வளவு கடினம், எனினும் எப்படி காற்றில் கரைந்து காணாமல் போய்விடும் என்பதற்கு அவர்தம் வாழ்க்கையும், அவரது பிரபலமான பாட்டும் எடுத்துக்காட்டாக விளங்கிவிட்டன.  

MK Thygaraja Bagavathar who held sway over mass audience in the first half of last century passed away in chill penury this day – 64 years ago !!
 
With regards – S Sampathkumar
1.11.2023 

No comments:

Post a Comment